Monday, August 16, 2010

அட.. மக்கு மகேஷு...

                  டி.வி. பார்க்கும் அனைவருக்கும் பரிச்சயமான வார்த்தைகள் இது.. விக்ரம் தோன்றும் ஒரு நகைககடன் விளம்பரத்துக்கான வரிகள்.. ஆனால் நாம் பேசப்போவது இந்த விளம்பரத்தை பற்றியதல்ல. வேறு இரண்டு விளம்பரங்களைப் பற்றி. ஒன்று.. நடிகர் விஜய் தோன்றும் ஜாஸ் ஆலுகாஸின் விளம்பரம்.. இன்னொன்று DO-CO-MOவின் Pay per site (Body Builder) விளம்பரம்.. இந்த இரண்டு விளம்பரங்களையும் கொஞ்சம் அலசலாம் என நினைக்கிறேன்.. இதன் மூலம் கொஞ்சம் சினிமா / விளம்பர Making பற்றித் தெரிந்துகொள்ளலாம் என்பதே நோக்கம்.. மற்றபடி யாரையும் தாக்குவதல்ல என்பதை முதலிலேயே தெரிவித்துக்கொள்கிறேன்.

                முதலில் Joy Alukkas விளம்பரத்தை பார்க்கலாம். அதற்கு முன் பார்க்காதவர்கள் ஒருமுறை விளம்பரத்தை பார்த்துவிடுவதற்கு இந்த லிங்கை க்ளிக்கவும்..


இந்த விளம்பரத்தின் கதைகரு இதுதான்..

விஜய்.. இந்த விளம்பரத்தில் விஜயாகவே வருகிறார். அவர் எங்கோ காரில் போகும் போது..


 வழியில் தான் படித்த பள்ளிக்கூடம் வருகிறது. உடனே காரில் இருந்து இறங்கி.. உள்ளே வந்து பார்க்கிறார்.


அங்கு மாட்டப்பட்டுள்ள பள்ளிக்கூட மணியை பார்த்ததும் பழைய நினைவுகளை மீட்டெடுக்கிறார்.

அதற்கடுத்து காட்டப்படும் காட்சிகளில் எனக்கு சில குழப்பங்கள் இருப்பதால் விளம்பரத்தில் காட்டுவதை அப்படியே தருகிறேன். பள்ளிக்கூட மணி அடிக்கப்படுகிறது. மாணர்வர்கள் ஓரிடத்தில் கூடுகிறார்கள்.
மணியடிக்கும் பியூனை தலைமையாசிரியர் போன்ற ஒருவர் திட்டுகிறார்.


 “வேலையை விட்டு போ” என்கிறார். மாணவர்களும், ஆசிரியார்களும் சூழ்ந்து நின்று அதை வேடிக்கை பார்க்க, அந்த பியூன் தலைமையாசிரியரின் காலில் விழுந்து கெஞ்சுகிறார்.. கதறுகிறார்.


அப்போது சிறுவயது விஜய் கூட்டத்தில் இருந்து வந்து தானே மணியடித்ததாக சொல்கிறார்.


இதைக் கேட்டு தலைமையாசிரியர் கம்பை கீழே போட்டுவிட்டு செல்கிறார். விஜய் அந்த பள்ளியை விட்டே போகிறார்.

              
              அந்த நினைவுகளில் இருந்து மீளும் விஜய், அங்கு அதே பியூனை பார்க்கிறார்.
அவர் விஜயை பார்த்ததும் ஓடி வந்து காலில் விழுகிறார். தன் வேலையை(?) காப்பாற்றியதற்காக நன்றிகடன் செலுத்துகிறார்.


விஜயும் ஒரு மோதிரத்தை அவருக்கு அன்பளிப்பாக(?) கொடுத்துவிட்டு..


கார்களில் ஏறிச் செல்கிறார்.

         
               1. 25 நிமிடங்களில் ஒரு உணர்ச்சிக் காவியத்தையே எடுத்துள்ளார்கள்.. ங்கொய்யால.. கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எருமை கூட ஏரோப்ளேன் ஓட்டுதும்பாய்ங்க போல...

          இந்த விளம்பரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை தெளிவாகச் சொல்லவில்லை.. மணியை யார் அடித்தார்கள்..? விஜயா? அல்லது ப்யூனா...  ப்யூன் என்றால்.. அவர் எதற்காக த(க)ண்டிக்கப்பட்டார்..? தவறுதலாக பள்ளி முடியும் நேரத்திற்கு முன்னரே மணியை அடித்துவிட்டாரா..? சரி அப்படி அவர் அடித்திருந்தால் மாணவர்கள் எல்லோரும் வீட்டுக்குத் தானே ஓடியிருக்க வேண்டும் ஏன் எல்லோரும் ஓர் இடத்தில் கூடினார்கள்? அப்படி அடித்தது ஒரு தவறு என்றால், தலைமையாசிரியர் என்ன செய்வார்.. ஆபிஸ் ரூமிற்கு கூப்பிட்டு “ஏன் பெருமாள் இப்படி பண்ணுன? அடுத்தவாட்டி இப்படி பண்ணுனா சம்பளத்தை கட் பண்ணிடுவேன்.. ஜாக்கிரதை ” என்று வேண்டுமானால் சொல்வார்.. அதை விடுத்து அத்தனை பசங்களையும், ஆசிரியர்களையும் கூட்டி, பள்ளியின் நடுவே அனைவரின் மத்தியிலும் வைத்து பிரம்பால் அடிக்கிறாராம், எட்டி உதைக்கிறாராம்.. ப்யூன் காலில் விழுந்து கெஞ்சுகிறார்.. ஆனால் அவர் மசியவில்லை.. ‘வேலையை வி்ட்டு போ’ என்கிறார். ஏன்னென்றால் அவர் ரொம்ப ஸ்டிர்க்ட்... ஸ்டிர்க்ட்... ஸ்டிர்க்ட்...
             
                    சரி ரொம்ப ஸ்டிர்க்ட்டான ஹெட்மாஸ்டர் என்றே  அவரது கேரக்டரைசேஷனை வைத்துக்கொண்டாலும்.. விஜய் வந்து “நான் தான் மணியடித்தேன்” என்று சொன்னதும் “விஜய்.. நீயா அடிச்சது” என்று கேட்டு,  ‘என்ன... காந்தியே.. துப்பாக்கிய தூக்கச் சொல்லிட்டாரா?’.. என்பதாய் ரியாக்ஷன் கொடுத்து’  கம்பை நழுவ விடுகிறார்.. அவருக்கு அப்போதே தெரியும் போல, விஜய் பிற்காலத்தில் இளைய தளபதியாக, பெரிய ஹீரோவாக வருவார்,  டாக்டர் பட்டம் எல்லாம் வாங்குவார்.. என்று..

                  அடுத்த ‘கட்’ அதை விட காமெடி.. ஒரு மாணவன் பள்ளிக்கூட மணியை அடித்ததற்காக.. அந்த பள்ளிக்கூகூகூடத்தையேயேயே.. விட்டு அனுப்பும் ஸ்கூலை நீங்கள் இங்குதான் பார்க்கமுடியும். இதோடு அவர்கள் விடவில்லை.. நினைவலைகளில் இருந்த மீளும் விஜய் அதே பியூனை பார்க்கிறார்.. அவர் அன்று இந்த வேலையை  (அமெரிக்க ஜனாதிபதி போஸ்ட்டை(?!)) விஜய் காப்பாற்றிக் கொடுத்ததை நினைத்துப் பார்த்து, புல்லரித்து போய்.. “உன்னால நான் எவ்வளவு பெரிய ஆளா வளர்ந்திருக்கிறேன் பார். இந்த ராஜ்ஜியத்தை கட்டி ஆளுரதெல்லாம் உன்னால தான்..” என்பது போல் ஓடி வந்து காலில் விழுகிறார்.... கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி போடுகிறேன்.. காலில் விழுகிறார்.. (ஏம்பா வயசுக்குனு ஒரு மரியாதை இல்லையா? என்னமோ போங்க...)  இவரும் மோதிரத்தை பரிசளித்து விட்டு 8 கார்களில் ‘சர்’ ‘சர்’ ‘சர்’ ‘சர்’ ‘சர்’ ‘சர்’ ‘சர்’ ‘சர்’ என போகிறார்..”

              விஜய் காரில் வருகிறார் என்றால் ஒரு காரில் வரட்டுமே.. எதற்கு 8 விலை உயர்ந்த கார்கள்.. (பில்டப்பு..?! விளம்பரத்துலயுமா?)  பத்தாதற்கு கூடவே 7 கார்களில் கருப்பு பூனைப்படை செக்யூரிட்டிகள்.. கிட்டத்தட்ட ஒரு முதலமைச்சருக்கு(?) இருப்பது போல்.. ஒரு வேளை இந்த சம்பவம் 2011க்கு அப்புறம் நடக்குதோ(?)

            மொத்தத்தில், இந்த விளம்பரத்தின் கரு சுத்த பேத்தல்.. முழுக்க முழுக்க சில்லரை செண்டிமெண்ட், மற்றும் விஜய்-பில்டப்பை நம்பி மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது.. இது நடுநலையாக பார்ப்பவர் யாருக்கும் எரிச்சலை மட்டுமே கொடுக்கும்.. ரிமோட்டுக்கு வேலை வைக்கும். இதை ஒரு நல்ல விளம்பரம் என்று சொல்ல முடியாது.

              மற்றொரு விளம்பரமான Do-co-moவை பார்க்கலாம்.. இதன் லிங்க்குக்கு இங்கே க்ளிக்கவும்...
           

  இதன் கான்செப்ட் மிக எளிமையானது. அதன் காட்சிகளை இப்போது காணலாம்..

     ஒரு இளைஞன் தன் காதலியோடு கடற்கரையில் உட்கார்ந்திருக்கிறான். அப்போது பின்பக்கமாய் கைகளில் எக்ஸர்ஸைஸ் செய்யும் கருவியால் பயிற்சி செய்கிறான்.



குளிக்கும் போதும் டம்பிள்ஸை தூக்கி பயிற்சி செய்கிறான்.



பஸ்ஸில் போகும் போதும் கம்பிகளில் தொங்கியபடி ஃபுல்லப்ஸ் எடுக்கிறான்.


வீட்டிற்கு வரும் முதியவரிடம் (மில்ட்ரி ரிட்டன்?) கைகொடுக்கும் போதும் தனது மஸில்ஸ் தெரிய இறுக்கமாய் கைகொடுக்கிறான்.


காதலியுடன் ரெஸ்டாரெண்ட்டில் பெப்பர் பாட்டிலை திறக்கும் போதும் கையில் தவளை(!) தெரிய திறக்கிறான்.


கடைசியாய் ஷாப்பிங் போகையில்..

    

அங்கு ஒரு குழந்தை கண்ணில் பட..


அதையும் ‘வெயிட்’டாக பாவித்து மேலேயும், கீழேயும் தூக்கி எக்ஸர்ஸைஸ் செய்கிறான்.


                அவனது நோக்கம், செயல் எல்லாம் பாடியை வளர்ப்பது.. எல்லாவற்றிலும் அவன் அதையே பார்க்கிறான். அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறான் என்பது மட்டுமே. இப்படி ‘உங்களது தேவையும் ஒன்றே ஒன்று தான் என்றால் (ஏதேனும் ஒரு வெப்சைட் மட்டும் தான் பார்க்க போகிறீர்கள் என்றால்..) நீங்கள் அந்த ஒன்றுக்கு மட்டும் காசு தந்தால் போதும்’ என்பதே இந்த விளம்பரம்.

            மிக எளிமையான நடை.. அருமையான கான்செப்ட், ஒவ்வொரு ப்ரேமிலும் நகைச்சுவை. ஒரு சர்ப்ரைஸ்.. ஏன் இப்படி செய்கிறான் என்ற ஒரு எதிர்பார்ப்பு.. கடைசியில் இது அத்தனைக்குமான விடை.. இந்த கட்டமைப்பு விளம்பரத்தை கடைசிவரை பார்க்க வைக்கும். ஒவ்வொரு முறையும் சேனலை மாற்றவிடாமல் பார்க்க வைக்கும். மனதி்ல் நிறுத்தும். அது தான் ஒரு விளம்பரத்தின் வெற்றி.. அது இங்கு மிக அழகாக கையாளப்பட்டிருக்கிறது.


           போனஸாக இன்னொரு மிகச்சிறந்த (வெளிநாட்டு) விளம்பரத்தையும் இங்கு தருகிறேன். அது எதற்கான விளம்பரம் என்று கடைசியில் தெரியவரும் போது, கண்டிப்பாய் நீங்கள் வியந்து போவீர்கள்...
லிங்க் இங்கே..




கருத்துக்களை தவறாமல் பதிவு செய்யுங்கள்..



.

Wednesday, July 28, 2010

தமிழ் சினிமாவும்.. ரசிகனின் மனநிலையும் - 1


                    எனது மொத்த பட டிவிடிகளையும் ரகம் வாரியாக பிரித்து தனியாக அட்டவணைபடுத்தி அடுக்கிவிடலாம். பின்னால் தேவைப்படும் பொழுது எடுக்க வசதியாக இருக்கும் என்று பிரிக்க ஆரம்பித்தேன்... ஆங்கிலப் படங்களை வகை வாரியாக (Action, Comedy, Fantacy, Thriller, Kids) பிரித்து அடுக்கும் போது ஒன்றும் தோன்றாத எனக்கு, தமிழ்படங்களை பிரிக்கும் போது அட்டவணையில்படப்பிரிவு’ என்ற காலத்தில் என்ன எழுதி நிரப்புவது என்றே தோன்றவில்லை. காரணம்.. ஒரு சில படங்களைத் தவிர எல்லா படத்திலும் எல்லாமும் கலந்து ஒரு மசாலாவாகவே இருக்கிறது.. இதற்கு காரணம் என்று யோசித்த போது தோன்றியவைதான்.. கீழ்வரும் இந்த பாரகிராப்புக்களுக்கு காரணம்..

                ‘அவரு மக்களோட டேஸ்ட்டு தெரிஞ்ச டைரக்டர்பா...’ என்று சினிமா உலகத்தில் ஒரு வழக்கு இருக்கிறது.. அதென்னடேஸ்ட்டு”? பொதுவாக ஒரு படம் பார்க்கும் போது ரசிகனின் மனநிலை எப்படி இருக்கும்? எந்த மாதிரியான படத்தை விரும்புவார்கள்? எந்த காட்சிக்கு  ரசிகனின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் இதைத் தெரிந்தவரைத்தான் ‘டேஸ்ட்’ தெரிந்தவர் என்று அழைக்கிறார்கள். இது தெரிந்து விட்டால், எடுக்கும் படம் தோற்காது. ஆனால் அதைத் தெரிந்து கொள்வது அவ்வளவு சுலபம் இல்லை. ஏனெனில் ஒவ்வொரு ரசிகனின் மனநிலையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். யாருக்கு எது பிடிக்கும் என்று எப்படி தெரிந்து கொள்வது கஷ்டம் தான். ஆனால் துல்லியமாக தெரியாவிட்டாலும்.. ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.

                   அதாவது எப்படி படம் எடுத்தால் ஓடும். எப்படி படம் எடுத்தால் ஓடாது. இந்த ரகசியத்தை சொல்வது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.
                
                    சும்மா.. குத்துமதிப்பாய் சொல்லப் போவதில்லை. மக்களின் மனநிலை (அதாங்க.. சைக்காலஜி), கடந்த காலத்தில் மக்கள் ஆதரித்த படங்கள், ஆதரிக்காத படங்கள் போன்றவற்றை கொண்டு ஒரு சிறிய ஆராய்ச்சி(!?) செய்திருக்கிறேன். நீங்களும் உங்கள் கருத்தை எனக்குத் தெரிவிக்கலாம். மற்றொரு விஷயத்தையும் தெளிவுபடுத்தி விடுகிறேன். இந்த ஆராய்ச்சியை(?) கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன் வந்த படங்களில் இருந்து இன்று வந்த படங்கள் வரை கணக்கில் கொண்டே செய்கிறேன். இதன் நோக்கம்  நமது தமிழ்  திரைப்படத்தையும், ரசிகனின் ரசனையையும்  பற்றியது  மட்டுமே. மற்றபடி எந்த நடிகரையும், டைரக்டரையும் உயர்த்தி, தாழ்த்தி பேசுவதல்ல.. ஓ.கே.. ஆராய்ச்சி்க்குள் போகலாம்..

                   ஒரு படத்தை பாரக்கும் போது அறிந்தோ அறியாமலோ தன்னை அந்த கதையின் நாயகனாய் வைத்து பார்ப்பதே பெரும்பாலானவர்கள் மனநிலை...
               
                 எப்போது ஒரு ரசிகனுக்கு ஒரு நடிகனை பிடிக்கிறது? ரசிகனது வாழ்க்கையில் எதெல்லாம் நடந்ததோ அல்லது எதையெல்லாம் நடத்த நினைக்கிறானோ, அதை அப்படியே அல்லது அதற்கு வெகு அருகில் ஒரு நடிகன் படத்தில் நடத்திக் காட்டும் போது அவனுக்கு அந்த நடிகனை பிடிக்கிறது.. கொஞ்சம் விவரம் தெரிந்தவர்களுக்கு நடிகனுக்கு பதில் டைரக்டரை.. ஏனென்றால் நமது நாட்டில் ஜேம்ஸ் கேமரூனுக்கு மாலை போடுபவர்களை விட டையனோசருக்கு மாலை போடுபவர்கள் தான் அதிகம். அந்த மனநிலையை புரிந்து படம் எடுப்பவர்கள் தான்டேஸ்டுதெரிந்தவர்கள்.. அப்படி டேஸ்டு தெரிய டைரக்டர்களுக்கு தமிழர்களின் மனநிலை தெரிந்திருக்க வேண்டும்.. இது தெரிந்தாலே போதும் கூடுமானவரை ஓடாத படங்களை எடுப்பதை தவிர்க்கலாம்.. சரி.. அப்படி தமிழனின் மனநிலை எப்படித்தான் இருக்கிறது?
                
                  எப்படிப்பட்ட படங்களை எடுத்தால் அந்த படம் ஓடாது என்பதை முதலில் பார்க்கலாம்...

1. மதம், சமூகம் சார்ந்த பிரச்சனைகளை சொல்லும் படம்
2. இயற்கை சீற்றம் சார்ந்த படங்கள்
3. போராட்டங்கள், மனித உரிமை போன்ற சீரியஸ் படங்கள்..
4. அனிமேஷன் படங்கள்
5. முழுநீள ஆக்ஷன் படங்கள்
6. பேய் படங்கள், அமானுஷ்ய சக்தி படங்கள், த்ரில்லர்
7. (உண்மையான) சாமிப் படங்கள் (மிக நன்றாக இருந்தால் சி சென்டரில் ஓடலாம்)
8. ஃபேன்டஸி படங்கள்
9. சிறுவர்களுக்கான படங்கள் (இப்படி ஒரு கேட்டகிரி தமிழில் இது வரை வரவும் இல்லை. (பசங்க?) இது சிறுவர்களுக்கான படமா? சிறுவர்களை பற்றிய படமா?)
10. (காதலைத் தவிர்த்து மற்ற) உணர்வுகளைச் சொல்லும் படங்கள்

                     இந்த லிஸ்ட் போய் கொண்டே தான் இருக்கும். நான் முதலில் இந்த லிஸ்ட்டை போட்டிருக்க கூடாது.. எது ஓடும்.. என்ற லிஸ்டை போட்டிருந்தால் வேலை சுலபமாய் இருந்திருக்கும். இங்கு இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நான் சொல்ல வேண்டியிருக்கிறது. மேலே உள்ள லிஸ்ட்டில் வரும் படங்கள் எவ்வளவு நன்றாக எடுக்கப்பட்டிருந்தாலும் அந்த படங்கள் ஓடாது.  வேண்டுமானால் பத்திரிக்கைகளிலும், விஷயம் தெரிந்தவர்களிடமும் பெயர் வாங்கும். அவ்வளவே.
                       இதற்காக இந்த மாதிரி படங்களையோ, புது முயற்சி படங்களையோ எடுக்க கூடாது என்று நான் சொல்ல வரவில்லை. எடுக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் தான் சொல்கிறேன்.

இவை தான் ஓடும்(?)...

1. காதலை மையமாக கொண்ட படங்கள்..
2. காமெடி படங்கள்
3. காதல், கவர்ச்சி, காமெடி, ஆக்ஷன், செண்டிமென்ட் எல்லாம் கலந்த ‘மசாலா’ படங்கள்.

அவ்வளவு தான். இந்த மூன்றே கேட்டகிரி தான் மொத்த தமிழ்படமும்.


இனி இதற்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போம்..
              
                   ஆங்கிலப்படங்களுக்கு பார்வையாளர்கள் அதிகம்... அவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு மனநிலைகளில் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதனால் எந்த கருத்தைப் பற்றிச் சொன்னாலும் அதை பார்ப்பதற்கு ஆதரிப்பதற்கு ஆட்கள் இருக்கின்றனர். ஆனால் தமிழ்படங்களுக்கு ஏறத்தாழ ஏழு கோடி பேர் மட்டுமே.. அந்த ஏழு கோடி பேரும் கிட்டத்தட்ட ஒரே மனநிலையில் உள்ளவர்கள்.. ஏன் இப்படி சொல்கிறேன் என்றால்... தமிழ்நாட்டில் இருக்கும் மக்களின் மனநிலை, காலநிலை, சந்திக்கும் பிரச்சனை, பார்க்கும் டிவி சேனல், அரசியல், எல்லாமே ஒன்று(!) தான்.
               .
                      பொதுவாக தமிழ்நாட்டு மக்கள் பெரிய பிரச்சனைகள் எதையும் பார்த்ததில்லை.. மேலும் அதை விரும்புவதும் இல்லை.. அது சமூகம் சார்ந்ததோ இயற்கை சார்ந்ததோ, எதுவாக இருந்தாலும் விரும்புவதில்லை. அதனால் இதை கதையின் மையமாக கொண்ட படங்கள் ஓடாது.
            
                         ஒரு இலங்கை பிரச்சனையை மையமாக கொண்ட கன்னத்தில் முத்தமிட்டால், இந்து-முஸ்லீம் பிரச்சனையை சொன்ன பம்பாய்.. ஜெய்ராம், போன்ற படங்கள் சரியாக ஓடவில்லை.. காரணம்.. ‘இவை பற்றியெல்லாம் விவாதிக்க, யோசிக்க நாங்கள் தியேட்டருக்கு வரவில்லை  நாங்கள் படம் பார்க்க வருவது வெறும் பொழுதுபொக்கிற்கு மட்டுமே’ என்பது மக்கள்  வாதம். இதில் இன்னொரு விஷயம் இப்படிப்பட்ட மதம் சார்ந்த பிரச்சனைகளை பற்றிய அந்த படம் எவ்வளவு நன்றாக எடுக்கப்பட்டிருந்தாலும் அதை மக்கள் புறக்கணிக்கத் தான் செய்வார்கள். ஏனெனில் அமெரிக்காவிலோ, மற்ற பெரும்பான்மையான நாடுகளிளோ  இருக்கும் மக்கள் ஏறத்தாழ ஒரே இனத்தை சார்ந்தவர்கள்.. நம் நாட்டில் பலதரப்பட்ட மக்கள் இருக்கிறார்கள்.. இந்து மதத்தை எடுத்துக் கொண்டாலே சைவக்கடவுள், அசைவக்கடவுள் என்று பல பிரிவுகள் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் இது போன்ற இன, மத, ஜாதி பிரச்சனையை எடுத்தால் அந்த படம் கண்டிப்பாக ஒரு சமூகத்தினரால் புறக்கணிக்கப்படும். கடுமையான விமர்சனத்துக்கும் உள்ளாகும்.

                      அதே போல்இயற்கை சீற்றத்தை பொருத்தவரை தமிழகம் ஒரு பெரிய பூகம்பத்தையோ, சுனாமியையோ, தொடர்மழையையோ, எரிமலை வெடிப்பையோ, பனிப் பொழிவையோ வெகு அருகில், நேரடியாக பார்த்ததில்லை... தொடர்மழை என்றால் அதிகபட்சம் 4, 5 நாட்கள்.. அதனால் அதைக் களமாக கொண்டு உருவாக்கப்படும் படங்கள் அவர்களை பாதிப்பதில்லை.. ஒரு வால்கனோ, ஒரு டே ஆப்டர் டுமாரோ, ஒரு 2012 போன்ற படங்களை நமது தமிழ்நாட்டு ‘த்ரில்’ பிரியர்கள் மட்டும் பார்ப்பதோடு சரி.. மற்றவர்கள் அதை சீண்டமாட்டார்கள்...  மேலும் கஷ்டங்களை மறக்க அல்லது மறைக்க விரும்புவதே நமது தமிழர்களின் மனநிலையாக உள்ளது.
                         அதைப்போல வாழ்வின் கஷ்டங்களை. அப்பட்டமான நிஜங்களை சொல்லும் படங்களையும் மக்கள் விரும்புவதில்லை. அதற்கு சிறந்த எடுத்தக்காட்டு ‘மகாநதி’. அதன் அப்பட்டமான யதார்த்தமே.. அந்த படத்தை மறுமுறை பார்க்கவிடாமல் செய்கிறது.

                     மற்றொன்று நமது தமிழ் நாட்டில் டெக்னாலஜிக்கு கிடைக்கும் அவமரியாதை வேறு எந்த நாட்டிலும் காணக் கிடைக்காதது.. முழுநீள அனிமேஷன் படத்தை இரண்டு மூன்று வருடங்கள் கஷ்டப்பட்டு எடுத்தால் அதை பொம்மைப்படம், சின்னப்புள்ளைங்க படம் என்று முகத்தை திருப்பிக் கொள்வார்கள்... மொத்தத்தில் அவர்களுக்கு 3டி படம், அனிமேஷன் படம், போன்றவை குழந்தைகள் படம். சரி இந்த படங்களுக்கு குழந்தைகளையாவது கூட்டிப்போவார்களா என்றால்... இல்லை.. தமிழ்நாட்டை பொருத்தவரை பெரியவர்கள் படத்தை தான் குழந்தைகளும் பார்க்க வேண்டும் என்பது (தலை)விதி(?)
               
                  அதிலும் இவர்கள் லோ பட்ஜெட்டில் கிராபிக்ஸ் பண்ணுகிறேன் போ்வழி என்று ஹீரோ நடக்கையில் தீப்பொறி வரவைப்பதில் இருந்து யானையை கிரிக்கெட் விளையாட விடுவது, காரை பழிவாங்க வைப்பது என்று இறங்குவதையும், மேட்ரிக்ஸின் ‘டைம் ஸ்லைஸிங்’, எபெக்டையும், ‘அனிமேட்ரிக்ஸ்’ எபெக்டையும் ஒன்றாக பாவிப்பதில் இருந்து  நமக்கு ஒரு உண்மை புரியும்... நமது மக்களுக்கு தேவை “மாதிரி” தான்.. ஒரிஜினல் அல்ல... ஐ பாட் மாதிரியே இருநூறு ரூபாய்க்கு ஒரு எம்.பி 3 ப்ளேயர்.. அதில் பாட்டு என்ற ஒன்று வந்தால் போதும்.. இருபதாயிரம் ரூபாய்க்கு இருப்பது மாதிரியான இரண்டாயிரம் ரூபாய் சைனா மொபைல்... இப்படி “மாதிரி”யே போதும்...
             
                இதற்கு சிலர் தமிழக மக்கள் டெக்னாலஜியை விட உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அதனால் உணார்வுப் பூர்வமான படங்களைத் தான் விரும்புவார்கள்.. புதுமையான படங்களை ஓட வைத்துள்ளனர் என்று ஒரு லிஸ்ட் கொடுப்பார்கள்... அழகி, அலைபாயுதே, காதல், சேது, 7 ஜி. ரெயின்போ காலனி, ஆட்டோகிராப், சுப்ரமணியபுரம் இது மாதிரியான படங்கள் அதில் இருக்கும்... அவர்களிடம் ஒரு கேள்வி.. “காதல்எடுக்கத் தெரிந்த பாலாஜி சக்திவேல்க்கு கல்லூரியும், சாமுராயும் எடுக்கத் தெரியாதா? ஆட்டோகிராப் எடுக்கத் தெரிந்த சேரனுக்கு தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி எடுக்கத் தெரியாதா? அலைபாயுதே எடுக்கத்தெரிந்த மணிரத்னத்துக்கு கன்னத்தில் முத்தமிட்டால், குரு, இராவணன் எடுக்கத் தெரியாதா? அழகி எடுக்கத் தெரிந்த தங்கர்பச்சானுக்கு சொல்லமறந்தகதை எடுக்கத் தெரியாதா? சேதுவுக்கு பிறகு நல்ல டைரக்டார் என பெயரெடுத்தார் பாலா ஆனால் படம் எதுவும் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.. காரணம் டைரக்டர்கள் அல்ல... காதலை எப்படிச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் தமிழ் ரசிகர்களுக்கு மற்ற உணர்வுகளை உணர்ந்து பார்க்க நேரமில்லையோ அல்லது விரும்புவதில்லையோ என்னவோ...

                  சிறுவர்களுக்கான படங்கள்... இப்படி ஒரு கேட்டகிரி தமிழில் இது வரை வரவும் இல்லை. பசங்க? இது சிறுவர்களுக்கான படமா? சிறுவர்களை பற்றிய படமா? என்றால் இது சிறுவர்களைப் பற்றிய படம் என்று தான் சொல்வேன்.

                    பேய் படங்கள், த்ரில்லர் படங்களுக்கு நம்மவர்கள் முக்கியத்துவம் தருவதில்லை. ஏனோ அதில் அவர்களுக்கு ஆர்வம் இருந்ததில்லை. ஒருவேளை பயமோ என்னவோ... இடைக்காலத்தில் கூட நாளைய மனிதன், வா அருகில் வா, ஜென்ம நட்சத்திரம், என்று சில படங்கள் வந்து கொண்டிருந்தன.. இப்போது ஒன்றும் கண்ணில் படவில்லை. அனந்தபுரத்து வீடு.. காலியாக உள்ளது. நல்ல திரைக்கதை அம்சத்துடன் வந்த விசில் படம் கூட ஓடவில்லை.

                   சாமி படங்களுக்கு கூட முன்பிருந்த மவுசு இப்போது இல்லையென்றே தோன்றுகிறது. கொஞ்ச காலத்திற்கு முன்பு அம்மன், பாளையத்தம்மன், என்று சில டஜன்கள் வந்தன.. அதன்பின் ஒன்றும் வந்தது போல் தெரியவில்லை. சமீபத்தில் ‘அருந்ததி’ மட்டுமே நன்றாக ஓடிய ஒரே சாமிப்படம் என்று நினைக்கிறேன். அதுவும் கூட டப்பிங் படம்.

                   ஆக்ஷன் படங்களை இளைஞர்கள் மட்டுமே ரசிக்கிறார்கள்.. தமிழில் முழுவதும் ஆக்ஷன் படம் என்ற ஒன்றும் வந்ததில்லை. ஒரு காதல் கதையில் ஆக்ஷன் கொஞ்சம் அதிகமாக இருந்தால் அதை ஆக்ஷன் படம் என்று சொல்கிறார்கள். ரன், சண்டைகோழி போன்றவை ஆக்ஷன் படம் என்கிறார்கள். அல்லது விஜயகாந்த், அர்ஜீன், படத்தை சொல்கிறார்கள்.

                  
                  காதலைத் தவிர உணர்வுகளை சொல்லும் படங்களை நம்மவர்கள் ஓட வைத்ததாய் சரித்திரம் இல்லை. இதற்கு நான் மேலே சொன்ன “அழகி எடுக்கத் தெரிந்த தங்கர்பச்சானுக்கு சொல்லமறந்தகதை எடுக்கத் தெரியாதா?....” என்பதே என் பதில். காதல் மட்டுமே எவ்வளவு அபத்தமாக சொன்னாலும் (நாக்கை வெட்டுவது, கிட்னி கொடுப்பது, சட்னி கொடுப்பது)தப்பித்தவறியாவது ஓடிவிடும்.. அதிலும் நீங்கள் காதலை கொஞ்சம் புதுமையாக சொல்லிவிட்டால் போதும் அந்த படம் சூப்பர் ஹிட் ஆகிவிடும். ஆனால் மற்ற உணர்வுகளை நீங்கள் எவ்வளவு நன்றாக சொல்லியிருந்தாலும் அது ஓடுவதற்கு எந்த கியாரண்டியும் கொடுக்க முடியாது.

            நமது புதுமைவிரும்பி  இயக்குனர்கள்... தமிழ் சினிமாவை எப்படியாவது மேலே ஏற்றித் தீருவது என கங்கனம் கட்டிக்கொண்டு படம் எடுப்பார்கள். முதல் படத்தை எடுக்கும் போது ஒரு வித்தியாசமான கதையை காதல் பிண்ணனியி்ல் எடுப்பார்கள். மக்கள் அதற்கு கொடுக்கும் ஆர்வத்தைப் பார்த்து ‘அட மக்கள் வித்தியாசமான படத்த ஏத்துக்கிறாங்கப்பா’ என்று சொல்லி அடுத்த படத்தை முற்றிலும் புதுமையாக செய்து.. அடிவாங்குவார்கள்.. சமீபத்தில் அங்காடித்தெரு படம் தந்த தைரியத்தில் அடுத்து வசந்த பாலன் எடுக்க இருக்கும் ‘அறவான்’ படத்தை நினைத்தால் கொஞ்சம் பயமாக இருக்கிறது.

              ‘மதராசபட்டினமே’ இன்னும் இரண்டு வரிகள் அதிகமாய் சுதந்திரத்தை பற்றி பேசியிருந்தால் ‘டுமீல்’ ஆகியிருக்கும். படம் வெளியான முதல் இரண்டு நாள் யாரும் தியேட்டருக்கு போகவில்லை. சுதந்திரம், போராட்டம்னு ‘மொக்கயை(?)’ போட்டிருவாங்களோனு மக்கள் பயந்தனர். படம் பார்த்துவிட்டு வந்து ‘சே.. சே.. அப்படியெல்லாம் இல்லப்பா... நல்லபடம்’ என்று சத்தியம் செய்தபின்தான் படம் பிக்-அப் ஆகி நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் விஜயின் இதற்கு முந்தய படமான ‘பொய் சொல்லப் போறோம்’-மில் ரியல் எஸ்டேட்டில் நடந்து கொண்டிருக்கும் போர்ஜெரியையும் அதனால் பாதிக்கப்படும் குடும்பத்தையுமாக, இன்றைய வாழ்வின் யதார்த்ததை மிக நன்றாக பதிவுசெய்திருப்பார். ஆனாலும் கூட அந்த படத்தை யாரும் ஆதரிக்க வி்ல்லை.

                  நான் ஆஹா எப்.எம் - மில் வேலை செய்யும் போது ஒருநாள் காலை விவாதத்திற்கு எந்த மாதிரியான படங்களை மக்கள் விரும்புகிறார்கள் என்று டாபிக் வைத்தோம். அதற்கு ஒருவர் “சோகப்படங்கள் பிடிக்காது.. நாங்களே கஷ்டங்கள மறக்க தான் தியேட்டருக்கு வர்றோம். அங்கயும் வந்து கஷ்டம், கஷடம்னா எப்படி பார்க்கத் தோணும்.. பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரு டீ வாங்கி கொடுத்தா அவன் சோகத்தை பூரா சொல்லப் போறான்” என்றார்.. இதும் கூட உண்மை தான்.

                   மேலும் உணவு என்று எடுத்துக் கொண்டால் கூட வெளிநாட்டில் பீஸா என்றால் ஒரு பீஸாவை வர வைத்து இடது கையாலேயே எடுத்து சாப்பிட்டு விட்டு போய் விடுவார்கள். ஆனால் நம்மவர்கள் 3 இட்லி என்றால் கூட அதற்கு சட்னி, சாம்பார், மிளகாய் பொடி, ஓரமாய் ஒரு வடை என்று கலந்து கட்டி அடிப்பார்கள்.. படமும் கூட அப்படித்தான். காதல், காமெடி, செண்டிமென்ட், ஆக்ஷன், கிளாமர் என எல்லாம் கலந்த ‘மசாலா’ படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள்.. ஆனால் அதிலும் கூட அளவுக்கு அதிகமாய் போவதால் தான் சில தளபதிகளின் படங்கள் கூட தோற்றுப் போகின்றன.

                     மொத்தத்தில் நம் மக்கள் புதுமையை எதிர்பார்க்கிறார்கள்.. ஆனால் அது 8 அடி, 16 அடி பாய்ச்சலில் அல்ல.. 7, 8 சென்டிமீட்டர்களில்... அதற்குத்தான் அவர்களை அவர்கள் வாழும் சூழல் பழக்கியுள்ளது என்பது எனது கருத்து.

                     நீங்களும் உங்கள் கருத்தை தவறாமல் பதிவுசெய்யுங்கள்...

Thursday, July 15, 2010

மதராசபட்டினம் - ‘நக்கீரன்’ விமர்சனத்திற்கு ஒரு மறுகுரல்

இது மதராசபட்டினம் படத்திற்கு ‘நக்கீரன்’ இணைதளத்தில் வெளியான விமர்சனத்திற்கு நான் கொடுக்கும் ஒரு மறுகுரல். நக்கீரன் விமர்சனத்தை கீழ்காணும் ‘லிங்’கின் மூலம் பார்வையிடலாம்.

http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=50


விமர்சனத்தில் நீங்கள் படத்தின் கதையை சொல்லியிருந்த விதம் மிகவும் அபத்தம்... இப்படி சொல்வதானால் உலகின் எந்த மிகச்சிறந்த படத்தின் கதையையும் மோசமாக சொல்லாம்.

ஹீரோ எதுவும் செய்ய வில்லை என்கிறீர்.. நீங்கள் என்ன எதிர்பாரக்கிறீர்கள்.. வெள்ளையனை ஒற்றை ஆளாய் நின்று டைவ் அடித்து, ட்ராம் வண்டி மேல் எகிறி குதித்து, ஓட ஓட விரட்டி, வெள்ளையனிடம் இருந்து சுதந்திரத்தை பிடுங்கி மக்களுக்கு கொடுத்து விட்டு,  வெள்ளையர்களை லண்டனுக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும் என்றா...

முதலில் ஒன்றை புரிந்த கொள்ளுங்கள்.. மதராஸபட்டினத்தை பொறுத்தவரை ஹீரோ அதன் இயக்குனர் விஜய் தான். இந்த கதையில் ஒரு இளைஞன்.. சலவைத் தொழிலாளி ஒரு வெள்ளைக்கார பெண்ணை காதலிக்கிறான். அவ்வளவே அவன் வேலை. மேலும் அவன் மல்யுத்த வீரன் ஆகவே அவனுக்கு ஒரு வாய்ப்பு.. வெள்ளைக்காரனுடன் மோதி அவர்கள் இடத்தை மீட்க கிடைக்கிறது. அதை செய்கிறான். மற்றபடி அவன் ஒரு சாதாரண இளைஞன். எந்த இயக்கத்தை சேர்ந்தவனும் இல்லை. கதை சுதந்திர போராட்ட காலத்தில் நடப்பதால் ஹீரோ கொடியை ஏந்திக் கொண்டும், வெள்ளையனை விரட்டி அடிக்க வேண்டும், போராட வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. அப்படி அந்த கால்த்தில் எல்லோரும் ஒன்று சேர்ந்து எதிர்த்திருந்தால் வெள்ளையனால் இவ்வளவு வருடம் தாக்குபிடித்திருக்கவே முடியாது. அப்படி இல்லை என்பது தான் வருத்தமே. அதுவும் போக அவன் வெள்ளையன் மீதுள்ள வெறுப்பை அவ்வப்போது காட்டத்தான் செய்கிறான்.. அவனால் முடிந்த அளவுக்கு.. கார் பின்னால் போகும் போது தனது கழுதையை மட்டும் தூக்கிக் கொண்டு வந்துவிடுகிறான். அவர்களுக்கு சேவகம் பண்ணிக்கொண்டிருக்க வில்லை. மேலும் அவன் எமியை தன்னைக் காதலிக்கும் ஒரு பெண்னாக மட்டும் தான் பார்க்கிறானேயொழிய வெள்ளைக்காரியாய் அல்ல.

சுதந்திரத்திற்காக பல தலைவர்கள் பல வழிமுறைகளில் பங்காற்றினார்கள்.. அத்தனை தலைவர்களை பற்றியும் சொல்வதற்கும், காட்டுவதற்கும் இது சுதந்திர போராட்டம் பற்றிய படம் இல்லை. இதன் நோக்கம் காதல். முன்பு சொன்னது போல் கதைக்களம் தான் சுதந்திர போராட்ட காலம். அதனால் அவரைப் பற்றி சொல்ல வில்லை இவரைப்பற்றி சொல்லவில்லை என்பது தேவையில்லாத பேச்சு. இந்த படத்தில் எந்த தலைவரையும் ப்ரேமில் காட்டவில்லை என்பதே அதற்கொரு சரியான ஆதாரம். ஏனெனில் இங்கு நோக்கம் அதுவல்ல.



”பகத்சிங் ஆதரவாளராக வரும் பருதியின் தோழர், ஆங்கிலேயரிடம் அகப்பட்டு துப்பாக்கியால் சுடப்படும் போது பயப்பட்டு பீதி அடைவதாக காட்டியுள்ளார் இயக்குனர்..” இதிலென்ன தவறு இருக்கிறது.. மரணபயம் என்பது எல்லோருக்கும் இருக்கும்.. மேலும் துப்பாக்கியால் சுடும் போது நெஞ்சை நிமிர்த்திக் காட்ட அவர் பகத்சிங்கின் ஆதரவாளர் தானே ஒழிய, பகத்சிங் கிடையாதே. இன்னொன்றையும் இங்கு சொல்ல வேண்டும்.. ஆர்யா தைரியமாக துப்பாக்கி முன் நிற்கிறாறே என்றால்... காதல் இதுவல்ல.. இதைவிட மடத்தனத்தையும் செய்யத் தூண்டும்... காதல் வந்துவி்ட்டால் அங்கு அறிவுக்கு என்ன வேலை இருக்கிறது.. புரட்சிக்காரனை விட காதலில் மரணம் அடைபவன் தான் அதிகம் (பேப்பரை பாருங்கள் சார் புரியும்) புரட்சியாளனை எதிரிதான் கொல்வான்.. காதலனை அந்த காதலே கொல்லும்.

நண்பனை, அவன் காதலை காப்பாற்றத்தானே ‘பகத்சிங் வாழ்க’ என்று சொன்னார்... வேறு தவறான தொழில் செய்பவர்களை தப்பிக்க வைக்க அல்லவே.. ஒட்டுமொத்த மக்களின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட பகத்சிங் இரு உயிர்கள், காதலர்கள்.. அதுவும் ஒரு இந்தியனை நம்பி வந்த ஆங்கிலேயப் பெண்ணை காப்பாற்ற தன்பெயரை பயன்படுத்தியதற்காக பகத்சிங் கோபித்துக் கொள்ள மாட்டார்..

எப்போதும் தனக்கென்று கொள்கைகள், கோட்பாடுகள் என்று ஏற்படுத்திக் கொண்டோ அல்லது யாராவது சொன்னதை அதன் உண்மையான அர்த்தம் தெரியாமல் கண்மூடித்தனமாக பின்பற்றுவதும் கூட அறியாமையே... உங்கள் விமர்சனம் அதைத்தான் இங்கு காட்டுகிறது... பெரியார் சொன்ன சீர்திருத்தம் சாதி விட்டு சாதி கல்யாணம். இங்கு மதம், இனம், நாடு எல்லாம் கடந்த ஒரு காதலுக்காக அந்த தலைவர்கள் பெயரை சொன்னதில் என்ன தவறு இருக்கிறது.

காதல் என்று வந்த பின் ஒடுக்கப்பட்ட இனம், தாழ்ந்த இனம், மேல் வர்க்கம்... இதெல்லாம் ஒன்றுமில்லை...

மேலும்,

மதராஸபட்டினம் படத்தில் இருந்த நுட்பமான விஷயங்களை நிறைய பேர் கவனிக்க தவறியுள்ளனர். தேவையில்லாத சில குறைகளையும் சொல்கின்றனர்..

”லகான் படத்தை பார்த்து காப்பியடிச்சிருக்காம்பா” - இது சிலர் சொல்லும் குற்றச்சாட்டு.. காரணம் லகானில் வெள்ளையனுக்கு எதிராக கிரிக்கெட் விளையாடி வரியை நீக்குவார்கள்... இதில் மல்யுத்தம் செய்து தங்களது நிலத்தை மீட்பார்கள்... இதிலும் அந்த படத்தில் வருவதைப் போன்றே ஆடையணிந்திருக்கிறார்கள்...

இதில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில இருக்கிறது. அப்போது ஏறத்தாழ இந்தியா முழுவதும் இதே போன்ற ஆடையைத்தான் அணிந்திருந்தார்கள்... அதன் பின் இரண்டிலுமே விளையாடுகிறார்கள்... இரண்டிலும் கிரிக்கெட் விளையாண்டால் சொல்லலாம்.. இதில் நாயகன் ஒரு மல்யுத்த வீரன்.. அவன் அதை செய்வதில் தப்பில்லை. லகானிலாவது ஆங்கிலேயரின் விளையாட்டான கிரிக்கெட்டை நம்மவர்கள் வேறுவழியில்லாமல் முறையான பயிற்சி இல்லாமல் விளையாடுவார்கள்.. ஜெயித்தும் விடுவார்கள். இதில், இவன் முறையாய் பயிற்சி பெற்ற சிறந்த வீரன் என்று தான் காட்டுகிறார்கள்.. அற்கேற்ற உடல்வாகும் (அந்த வெள்ளையனை விட நல்ல உடல்வாகு) இவனிடம் இருக்கிறது. அப்படியிருக்கும் போது அவன் அதை விளையாடி ஜெயிக்கிறான் என்று காட்டுவதில் தப்பில்லையே.. மேலும் அவன் அப்போதும் கூட முறைப்படி விளையாடுவதாகத் தான் இயக்குனர் காட்டுகிறார். ஒரு விறுவிறுப்புக்காக பறந்து பறந்து சண்டை போடுவது கிடையாது. இறுதிக்காட்சியில் மணிக்கூண்டிற்குள் அவன் சண்டை போடும் போதும், வெள்ளைக்காரனை தூக்கி வீசும் போதும் அவன் மல்யுத்த பாணியிலேயே சண்டை செய்கிறான். எங்கும் லாஜிக் மீறல் இல்லை.

அதன் பின்,

”படம் டைட்டானிக் மாதிரி இருக்கு”

சில விஷயங்கள் ஒத்து போவது உண்மைதான். டைட்டானிக்கில் பலவருடங்களுக்கு பின் அந்த கப்பலை கண்டெடுப்பதை பார்த்த பெண் பழைய நினைவுகளால் தூண்டப்பட்டு கப்பலை பார்க்க வருகிறாள். இங்கு தான் வாழ்வின் விளிம்பில் உள்ளோம் என்று தெரிந்த பெண் தன் பழைய காதலனை பார்க்க (தனக்கு சொந்தமில்லாத(!) தாலியை அவன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க) இந்தியாவிற்கு வருகிறாள்... இரண்டிலும் வெளிநாட்டு வயதான பெண், என்பதும் அவள் ஒருசில காட்சிகளில் இரு ஹீரோயின்களும் தொப்பியை ஒரே மாதிரி வைத்திருக்கிறார்கள் என்பதும், ஒரு காட்சியில், ப்ளாஸ்பேக் முடிந்து தற்போதை நிகழ்வுக்கு திரும்பும் ட்டிரான்ஸெக்ஷன் எஃபெக்ட் இளம் வயது பெண்ணின் கண்களில் ஆரம்பித்து வயதான பெண்ணின் கண்ணில் முடிவதும், ஹீரோயின் படுத்துக் கொண்டு ஆங்கிலப் பாடல் பாடுவதுமாக ஒருசில ஞாபகப்படுத்தும் ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆனால் கதையின் மையம் வேறு.. கதையும் வேறு.

ஆனால் பொக்கிஷம் படம் போல் உள்ளது என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது அபத்தத்தின் உச்சகட்டம்... என் புருஷன் மாதிரியே தான் பக்கத்துவீட்டுக்காரனும் சட்டை போட்டிருக்கான் அதனால அவனும் என் புருஷன் தான் என்பது போன்றது. இரண்டும் பழைய காலத்தில் நடக்கும் கதை என்பதால் இரண்டு படமும் ஒன்றாகுமா?

அதுபோக, இந்த விமர்சனத்தில் ஒரு வார்த்தை கூட அதன் டெக்னாலஜி பற்றி இல்லை. பழைய சென்னையை ஒரு குறைந்த பட்ஜெட்டில், போதுமான டெக்னாலஜி வசதிகள் இன்றி உறுத்தாமல்,
சிறப்பாக செய்திருப்பதை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை...

எமி இந்தியா வரும் போது ஏர்போர்டில் அவளது சூட்கேஸில் ஏர்லைன்ஸால் மாட்டிவிடப்படும் 'Tag' ஆக இருக்கட்டும், ஹனிபா உடம்பு சரியில்லை என்று படுத்திருக்கும் போது அருகில் இருக்கும் அமிர்தாஞ்சன் பாட்டிலாக இருக்கட்டும், மவுண்ட் ரோட்டில் இரு சாலைக்கும் இடையே கயிறு கட்டி நடுவில் தொங்கவிடப்பட்டிருக்கும் தெருவிளக்கு, துப்பாக்கி, அரசு முத்திரை, வண்ணான் தாளி, தண்ணீர் கொண்டு போகும் கலன்கள், பித்தளைக் குடங்கள், பழைய சைக்கிள், மின்சாரகம்பங்கள், வேஷ்டி கட்டும் முறை (சாதாரணமாய் கட்டும் போதும் ஒரு மாதிரியும், குஸ்தி போடும் போது இறுக்கமாய் பிடித்து இழுத்தாலும் அவிழாதபடி ஒரு மாதிரியும் கட்டுவார்கள்) மேலும் ரயில், கார், ரயில்வே ஸ்டேஷன், விளம்பர பலகைகள், பூட்டுகள், புத்தகங்கள், செருப்பு, காடா துணி ஆடைகள், என செட்ஒர்க்கில் அவ்வளவு டீட்டெயில்கள்...

மேலும் உறுத்தாத மொழிவழக்கு, திறனாக கையாளப்பட்ட பின்புலம், (இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில் விமானத்தில் இருந்து குண்டு போடுவது பற்றி அறிந்த அப்போதய ஆள் விமானம் கடந்து போகும் போதெல்லாம் “குண்டு போடுறாங்க,  குண்டு போடுறாங்க” என்றபடி ஓடுவது, நம்பி (ஹனிபா) போன்ற ஒரு சிலர் வெள்ளையர்களுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டு தான் வசதியாய் வாழ்வது, சுதந்திரம் சோறு போடுமா என்று வறுமையில் வாழும் மக்கள்) என்று ஒவ்வொரு சிறு விஷயத்திலும் டீட்டெயில் காட்டி சிறப்பாக செய்திருக்கிறார் இயக்குனர் விஜய். அவரது முந்தைய படங்களில் இருந்து இது ஒரு மிகப்பெரிய பாய்ச்சல் தான்.. அதற்காகவே இவரை மிகவும் பாராட்டலாம்.

 மேலும், தனியறையில் எமியும், ஆர்யாவும் இருக்கும்போதாகட்டும், இருவரும் இன்னலுக்கு பின் சந்திக்கும் இடத்திலாகட்டும் எத்தனையோ வாய்ப்புகள் இருந்தும் பெயரளவுக்கு கூட படத்தில் ஆபாசத்தைக் காட்டவில்லை. வெள்ளைக்காரி நடித்திருந்தும் முத்தக்காட்சி கூட இல்லை. இந்த “நல்லபிள்ளை தனத்தை” இவரது முந்தைய படங்களிலும் காணலாம். (தைரியமாக வயசு பிள்ளைகளுடனும், வயதானவர்கள் பி்ள்ளைகளுடனும் பார்க்கக் கூடிய (வேண்டிய) படம்.

விஜய் சார், இதோ மக்கள் உங்களை நல்ல இயக்குனர் பட்டியலில் சேர்த்து விட்டார்கள் விமர்சனங்களும், பாரட்டுகளும் குவிய ஆரம்பித்துவிட்டதே அதற்கு சாட்சி.. உங்கள் வீட்டு ஷோக்கேஸையும் காலியாக வைத்துக் கொள்ளுங்கள்.. விருதுகள் காத்துக் கொண்டிருக்கின்றன.
 
 

Saturday, May 1, 2010

ஏன் மணிரத்னம் சிறந்த இயக்குனர்..?

திரைப்படம் என்பது காட்சி ஊடகம்.. அதைப் புரிந்து கொண்டவரே சிறந்த இயக்குனர்.. ஒவ்வொரு விஷயத்தையும் டயலாக் மூலம் மட்டுமே சொல்லிக் கொண்டிருக்காமல் கூடுமானவரை காட்சிகள் மூலம் சொல்ல வேண்டும். அதை மணிரத்னம் செய்கிறார். உதாரணமாக சில காட்சிகள்..

உயிரே படத்தின் முதல்காட்சி..



தொலைவில் ஒரு கார் வருகிறது. அதன் விளக்கு ஒளி மட்டும் தெரிகிறது.. அந்த கார் சாதாரணமாக கடந்து போவதாய் காட்டப்படவில்லை.. ஒரு கம்பி வலைக்கு இடையே காட்டப்படுகிறது. ஊருக்குள் ஒரு கார் வருவதை மேலே இருந்து டாப் ஆங்கிளில் காட்டியிருக்கலாம்.. அல்லது சாதாரணமாக ஒரு பேன் ஷாட்டாக காட்டியிருக்கலாம்.. இப்படி கம்பிகளுக்கு இடையே காட்ட வேண்டிய அவசியம்..? இங்கு மணிரத்னம் முதல் ப்ரேமில் இருந்தே கதை சொல்லத் தொடங்குகிறார். இந்த ப்ரேமின் மூலம் சொல்லவருவது.. “இந்த ஊர் ஒருவித கட்டுப்பாட்டில் (இராணுவத்தின்) உள்ளது” என்பது தான்.

அலைபாயுதே படத்தின் திருமணக் காட்சி..


இந்தப் படத்தில் மாதவன்-ஷாலினி திருமணம் ஒரு கோவிலில் வைத்து நடக்கும். இந்த காட்சியை காட்டும் போதுசுற்றி கருப்பு வண்ணம் தெரியும் படி ப்ரேம் வைக்கப்பட்டிருக்கும். வழக்கமாக திருமணம் போன்ற மங்களகரமான நிகழ்ச்சிகளை காட்டும் போது நல்ல ஒளியில் “பளிச்” என காட்டுவதுண்டு. இங்கும் அப்படித்தான் காட்டப்படுகிறது. ஆனால் சுற்றி ஏன் கருப்பு வண்ணம் என்றால்... இது கல்யாணம் தான்.. ஆனால் திருட்டுக் கல்யாணம்.

தளபதி படத்தின் ரஜினி - அம்ரிஷ்புரி சந்திப்பு காட்சி


இந்த படத்தில் வில்லன் கேரக்டரான அம்ரிஷ்புரி ரஜினியை மம்முட்டியிடம் இருந்து பிரிந்து வந்து தன்னுடன் சோ்ந்து கொள்ளுமாறு சொல்வார். .ஆனால் ரஜினி எனக்கு நட்புதான் முக்கியம், அதனால் வரமுடியாது என்று சொல்வார். இந்த காட்சியில் ஒருவரை ஒருவர் பார்த்து பேசாமல் எதிரெதிராய் நின்று பேசுவார்கள்.. இதன் மூலம் மணிரத்னம் சொல்லவருவது “இருவரும் கருத்துகளால் முரண்பட்டு இருக்கின்றனர்” என்பதே..



கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி..



படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் மழைபெய்து கொண்டிருக்க வளர்ப்பு பெற்றோருடன் தனது பெற்ற தாயை பார்க்க வருகிறாள் பெண். அந்த காட்சியில் வளர்ப்பு பெற்றோருடன் சிறுமி நனையாமல் குடையின் கீழ் இருக்க தாயோ மழையில் நனைந்தபடி இருப்பார். இங்கு, ஒன்று அவரும் குடைக்குள் வரும்படியோ அல்லது அனைவரும் நனைவது போலவோ எடுத்ததிருக்கலாம். அப்படியில்லையென்றால் மழையே வராதபடி காட்சியை அமைத்திருக்கலாம். ஆனால் இந்த இடத்தில் இயக்குனர் சொல்லவரும் விஷயமே வேறு. இங்கு வளர்ப்பு பெற்றோரும் சிறுமியும் இந்தியாவின் பிம்பமாக இருக்கின்றனர். தாயோ இலங்கைத் தமிழர்களின் பிம்பமாக இருக்கிறார். மழையை போருக்கும், இன்னலுக்கும் உருவகப்படுத்தும் இயக்குனர், போரின் பாதிப்பை இலங்கைத் தமிழர்கள் நேரடியாக அனுபவிக்கின்றனர். இந்தியர்களோ ஒரு குடையின் கீழ் பாதுகாப்பாய் இருக்கிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்கிறார். இந்த படத்திற்கு முதலில் அவர் வைத்த தலைப்பு “மஞ்சள் குடை”

இயல்பும்.. இயல்பு மீறலும்..

“மணிரத்னம் இருட்டுலயே வச்சு படம் எடுப்பாருப்பா” என்று சிலர் சொல்வார்கள்.. அவர்கள் ஒரு விஷயத்தை யோசிப்பதில்லை.. பொதுவாக பகல் நேரங்களில் கூட நமது வீட்டிற்குள் எவ்வளவு வெளிச்சம் வருகிறது என்பதை சற்று கவனித்து பார்த்தால் உண்மை புரியும். அஞ்சலி படத்தல் வரும் அப்பார்ட்மென்ட், அலையாயுதேவில் வரும் ரயில்வே குவாட்ரஸ், இதயத்தை திருடாதேவில் வரும் மலைப்பிரதேசத்து வீடு, அக்னி நட்சத்திரம், நாயகன் போன்ற படங்களில் எல்லாம் அந்தந்த இடங்களுக்கான இயல்பான லைட்டிங்கே இருக்கும்.. அந்த இயல்பான லைட்டிங் தான் படத்தின் காட்சிக்கு உயிர் கொடுக்கும்..


இயல்பு மீறல்..

அப்படியானால் இயல்பு மீறலே இருக்ககூடாதா என்றால்.. இருக்கலாம் அது ஏதேனும் ஒரு வலுவான காரணத்திற்காக இருக்கலாம். ஹீரோவை காட்டும் போதெல்லாம் கேமராவை கண்டபடி ஆட்டுவது, சுற்ற விடுவது, தலைகீழாய் காட்டுவது போன்ற விஷயங்கள் மணிரத்னம் படங்களில் இருக்காது.. ஏனெனில் கேமரா என்பது நமது கண்களுக்கு ஒப்பாக சொல்லப்படுகிறது. நாம் இயல்பு வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ (பார்க்க) அப்படி மட்டுமே கேமரா ஆங்கிள் இருக்க வேண்டும். அதுவும் கண்களை உறுத்தாதவாறு..

ஆனால் இப்படி ஒரு காட்சியை மணிரத்னம் தனது அக்னிநட்சத்திரம் படத்தில் வைத்திருப்பார். க்ளைமேக்ஸ் காட்சியின் சண்டையில் மருத்துவமனையின் பவர் சப்ளையில் கோளாராகி ஸ்பார்க் அடிக்கும். இதற்கிடையே சண்டை நடக்கும்.. அது ஒரு புது முயற்சி ஆனால்அதுவும் கூட இயல்பானதே..

மற்றொரு மீறல்.. ஆய்தஎழுத்து படத்தில் வரும் யாக்கை திரி பாடலில்.. அந்த பாடல் ஒரு டிஸ்கொத்தெ-வில் ஒலிக்கும் பாடல். அங்கு நாம் தமிழ்பாடலை கேட்பதே நடக்காத விஷயம். ஆனால் அங்கு வெஸ்டர்ன் மியுசிக்கில் ஒரு சுத்தமான தமிழ் பாடல் ஒலிக்கும். அதற்கு அனைவரும் ஆடுவார்கள். இங்கு அழகுக்காக, புதுமைக்காக இயல்பு மீறப்பட்டுள்ளது..

உயிரே படக்காட்சி..




உயிரே படத்தில் ரேடியோ ஸ்டேஷனில் வைத்து நடைபெறும் உரையாடல் காட்சியில்.. கதவு அடிக்கடிதிறந்து திறந்து மூடும்படி அமைக்கப்பட்டிருக்கும். ஷாருக்கான் தன்னை ஏன் விட்டுப் போனாய் என்று மனிஷாவிடம் கேட்பார். இவருக்கு ப்ரீத்திஜிந்தாவை நிச்சயம் செய்திருப்பார்கள்.. இது ஷாருக்கானின் நிலைமை. மனிஷாவோ கொள்கை, பழிவாங்கும் எண்ணம் இதெல்லாம் இருந்தாலும் மனதில் ஷாருக்கானை காதலித்துக் கொண்டிருப்பார். இரண்டையும் விட்டுக் கொடுக்க முடியாத நிலை.. இப்படி இருவரும் மனநிலையும் ஓர் முடிவெடுக்க முடியாமல் ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சந்தப்பு நிகழும்.. இருவரது மனமும் ஒரு முடிவெடுக்க முடியாமல் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது என்பதையே அந்த கதவு திறந்து திறந்து மூடும் நிகழ்ச்சியின் மூலம் சிம்பாலிக்காய் உணர்த்தியிருப்பார்.


படத்தில் இருக்கும் ப்ராப்பர்ட்டி கூட கதையை சொல்ல வேண்டும்.. அலைபாயுதே படத்தில் ஷாலினி ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் அவர் வீட்டில் உள்ள பொருட்களே அதை சொல்லும். பாண்ஸ் பவுடர், பாராசூட் தேங்காய் எண்ணெய், காய்கறி வாங்கும் மஞ்சள் பை, பழைய மரகட்டில், நாற்காலிகள், எவர்சில்வர் வாட்டர் பில்டர், புடைக்கும் முறம், குக்கர் கேஸ்கெட், சிறய முகம் பார்க்கும் கண்ணாடி, பழைய ஜன்னல் ஸ்கிரீன், சுவற்றில் வரிசையாய் மாட்டப்பட்டிருக்கும் சாமிப் படங்கள்.. என நடுத்தரக் குடும்பத்திற்கான பொருட்கள் மட்டும் இருக்கும். மேலும் ப்ராப்பர்ட்டியில் டீட்டெயில் இருக்கும். அதாவது குக்கர் இருப்பதை காட்டுவது நார்மல். குக்கரின் கேஸ்கட் மாட்டப்பட்டிருப்பதை காட்டுவது டீட்ரெயில்.. சாதாரண வீடுகளில் இப்படித்தான் மாட்டி வைத்திருப்போம்..

ஷாலினி வீட்டை விட்டு போகும் பொழுது அவள் ஒரு புத்தம் புதிய சூட்கேசை எடுத்துப் போகவில்லை.. நடுத்தர குடும்பத்தில் பெரும்பாலும் தூக்கிப் போடாமல் சோ்த்து வைத்திருக்கும்.. உள்ளே கண்ணாடி வைத்த ஒரு பழைய மாடல் பெட்டியையே கொண்டு போகிறாள்.

இதே போல் இந்த படத்தில் திருமணத்திற்கு பிறகு இருவரும் வசிக்கும் வீடு சிமெண்ட் இல்லாமல் வெறும் செங்கல் கட்டிடமாய் இருக்கும்.. அதாவது அவர்கள் இருவருக்கும் இடையே முழுமையான புரிதல் இல்லை என்பதை சிம்பாலிக்காக சொல்லியிருப்பார்.